இரத்மலானை விமானப்படை தளத்தில் இன்று (15) பயிற்சியில் ஈடுபட்டிருந்த Y-12 வகை விமானத்தில் பட்டத்தின் நூல் சிக்கியதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், விமானத்தின் இடது பக்க சில்லு, இடது இயந்திரப் பகுதி மற்றும் மேலும் சில பகுதிகளில் பட்டத்தின் நூல்கள் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது விமானப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உலகளவில் பல விமான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குரகொட, சீனக்குடா, அனுராதபுரம், யாழ்ப்பாணம்–பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதை முற்றிலும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் இலங்கை விமானப்படை மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
