
யாழ்ப்பாணம் – மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்றது.

இதனால் பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் தொடர்ச்சியாக தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, தீ பரவலை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மணற்காட்டுப் பகுதியில் தீ பரவல் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.