நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகிய இருவரே நகைகளை திருடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்த நிலையில், அங்கு சென்ற இருவர் மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலை கரைக்கு இழுத்துள்ளனர்.
பின்னர், பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த தங்கக் காதணிகளை அகற்றி எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அங்கிருந்த சிலர் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
இந்த மனிதாபிமானமற்ற செயலை நேபாள பொலிஸாரும் பொதுமக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
