ஈரானின் லாரக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இது ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரானிய நிலப்பரப்பில் இடம்பெற்ற முதல் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலாகும்.

CENTCOM இன் விளக்கத்தின்படி, ஈரானிய புரட்சிகர காவல் படையினர் ஹோமுஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தும் ரொக்கெட் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அமெரிக்கப் படைகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானிய தரப்பில், இந்தத் தாக்குதலில் சிலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, ஜோர்தானிய ஆயுதப் படைகள் தமது வான்பரப்பிற்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக தெரிவித்துள்ளன.

அமெரிக்கா–ஈரான் இடையிலான இந்த புதிய தாக்குதல் பரிமாற்றம், ஹோமுஸ் நீரிணையைச் சுற்றியுள்ள இராணுவ மற்றும் இராஜதந்திர பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.