யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வொன்றின் இறுதியில், பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. போதகர் செபஸ்டியனின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான விடயங்கள் குறித்து போதகர் செபஸ்டியன் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, நிதிக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், ஊழியர்களின் பிரச்சினைகள், தேவகிராமம் திருச்சபை தொடர்பான சம்பவம் மற்றும் 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் கொள்வனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவம், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தாக்குதல் திட்டமிட்டதா, அதற்கான காரணம் என்ன என்பவை தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே முழுமையான உண்மை வெளிவரும்.