
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்று (25) பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்க, வெகு விமரிசையாக நடைபெற்றது.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியுடன் ஆரம்பமான நிகழ்வுகள், காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து இரதோற்சவமாக இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில், பக்தர்களின் “அரோகரா!” கோஷம் விண்ணை அதிரச் செய்தது.

பக்தர்களின் பக்திப் பெருக்குக்கு மத்தியில் துர்க்கையம்மன் தேரில் பவனி வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தி, ஆன்மிகம், பாரம்பரியம் ஒன்றிணைந்த இந்த இரதோற்சவம் பெரும் திரளான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.