
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் திரும்பலாம்
யுத்த காலத்தில் உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள் பலாலி விமான நிலையம் ஊடாக வந்த சிலருக்கு வழங்கப்படாததால் கைதுகள் இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தலையீடுகளின் பின்னர், குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் தற்போது எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றி நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்புவோரின் மீள்குடியேற்றம் மற்றும் தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.