நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள அரசியல் பேரணியில் கலந்துகொண்டு அரசியலில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள நிலையில், அவரது தந்தை திலக் வீரசிங்க அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இணையவழி ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தெரிவித்த கருத்துகளின்படி, லிமினி தற்போது அரசியலில் களமிறங்குவதற்கு தயாராக இல்லை என கூறியுள்ளார்.

“லிமினி 12ஆம் திகதி அனுராதபுர மேடையில் ஏறமாட்டார் என எனக்குத் தெரிந்தவரையில் நினைக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்ஷ தற்போது இல்லாத நிலையில், நாமலையும் அவர்களின் பிள்ளைகளையும் கவனிப்பதே லிமினியின் தற்போதைய முக்கிய பொறுப்பு எனவும் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “2029 ஜனாதிபதி வேட்பாளர் லிமினி” என வெளியாகும் தகவல்கள் குறித்தும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“எனக்குத் தெரியாது. நான் அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடைபெறவில்லை” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், லிமினி ராஜபக்ஷ உண்மையில் அரசியலில் களமிறங்குவாரா? என்ற கேள்வி தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.