வரி உள்ளடங்களாக 92 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் சந்தையில் 365 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 110 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 203 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. சில்லறை , மொத்த வியாபாரிகள் நடுத்தர மக்களை சுரண்டி பிழைக்கிறார்கள். நுகர்வோர் அதிகார சபை என்ன செய்கிறது என்பது தெரியவில்லை.நுகர்வோர் அதிகார சபைக்கும்,சந்தைக்கும் இடையில் தொடர்பற்ற நிலையே உள்ளது என எதிர்க்கட்சி எம்.பி.யான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற வரி திருத்தச் சட்டமூல திருத்தங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டு 97 பொருட்கள் புதிதாக வற் வரிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.வற் வரி அதிகரிப்பின் ஊடாக 400 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.ஒவ்வொரு தனி நபரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாவை வரியாக அறவிடுவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு வற் வரியை அதிகரித்துக் கொள்ளாமல் தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். தேசிய இறைவரித் திணைக்களம் 956 பில்லியன் ரூபா வரி வருமானத்தை அறவிடவில்லை.சுங்கத் திணைக்களம் 57 பில்லியன் வரியையும், மதுவரித் திணைக்களம் 6.9 பில்லியன் ரூபா வரியையும் அற விடவில்லை.
இரண்டு மது உற்பத்தி நிறுவனங்கள் 70 சதவீத வரியை செலுத்த வில்லை.இந்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யுமாறு பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு பரிந்துரைத்ததை தொடர்ந்து அந்த நிறுவனங்கள் வரி செலுத்தியுள்ளன.ஆகவே இந்த நிறுவனங்களிடமிருந்து முழுமையாக வரிகளை அறவிடுவதற்கு நிதியமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.